புதுச்சேரியைப்போல தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் தவிர இதர கட்டணங்களை வசூலிக்கத் தடை விதிக்க வேண்டுமென விழுப்புரம் நாடளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் 2021-2022 ஆம் கல்வியாண்டுக்குக் கட்டணக் குழு (Fee Committee) 2019-2020 ஆம் கல்வியாண்டுக்கு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தில் (Tuition Fee)75% கட்டணத்தை மட்டும் இரு தவணைகளில் (45%, 30%) வசூலித்துக் கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையும் நடவடிக்கை எடுத்து வருவதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இஸ்லாமியராக வாழ்வது குற்றமா? – ஹத்ராஸ் வழக்கும் அரசின் நடவடிக்கைகளும்
மேலும், உயர்நீதிமன்றத்தின் அதே வழிகாட்டுதலின் அடிப்படையில் புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டணக் குழு சுற்றறிக்கை ஒன்றை (No 09/DSE/FC/2021 Dt 23.06.2021) அனுப்பியுள்ளதாகவும், உயர் நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் 75% கட்டணம்தான் வசூலிக்க வேண்டும் என்று அதில் கூறியிருப்பதோடு பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் நடத்தப்படும்வரை தனியார் பள்ளிகளில் ஆண்டு நிதி, பேருந்து கட்டணம், சீருடை கட்டணம், நூலக- ஆய்வகக் கட்டணங்கள், விளையாட்டு, நுண்கலை
கட்டணங்கள், மருத்துவ கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணம் எதையும் வசூலிக்கக்கூடாதெனவும் கூறப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் பேரிடர் காலம் என்பதையும் கருதாமல் கல்விக் கட்டணம் மட்டுமின்றி பிற கட்டணங்களும் பெற்றோரிடம் வசூலிக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.
எனவே, புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை அனுப்பியிருப்பதைப்போல தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையும் இதர கட்டணம் எதையும் வசூலிக்கக் கூடாது என சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுக் கூடுதல் கட்டண வசூலைத் தடுத்து நிறுத்துமாறு விழுப்புரம் நாடளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.