காதலுக்கு கண்ணில்லைதான்… ஆனால் குரல் இருந்தது. இன்று அது ஓய்ந்துவிட்டது. சோடியம் குறைபாடு உள்ளவர்கள் சோடியம் ஏற்றிக்கொள்வது போல், பொட்டாசியம் குறைபாடு உள்ளவர்கள் பொட்டாசியம் ஏற்றிக்கொள்வது போல் காதல் உணர்வு என்றேனும் குறையும் போது எஸ்பிபியின் பாடல்கள் கேட்டால் காதல் உணர்வு மனத்தில் நிறைந்துவிடும்.
காதல் மட்டுமா? சோகம், உற்சாகம், கம்பீரம், காமம் என எத்தனை எத்தனை பாவங்களை அந்தக் குரல் கொண்டிருந்தது. ராமன் என்னும் புராண கதாபாத்திரத்தின் மீது அவன் சீதையை சந்தேகித்ததற்கான கோபம் எப்போதும் நமக்கு உண்டு. ஆனால் அவன் மீது கொஞ்சம் இரக்கம் உண்டானது எப்போது தெரியுமா? தெலுங்கு படமான ராம ராஜ்ஜியத்தின் தமிழ் டப்பிங்கில் பாலகிருஷ்ணாவுக்கு குரல் கொடுத்த எஸ்பிபி “சீதா சீதா…” என்று கதறிய போதுதான்.
மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்கு நாம் சாட்சியாக நிற்கிறோம்: அருந்ததி ராய்
ஒரு பரதநாட்டிய கலைஞர் அவரது நடனத்தின் வழியே காட்ட நினைக்கும் பாவங்களை தன் குரலிலேயே உணர்த்திய கலைஞன் பாலு. எஸ்பிபி ஒரு பாடகர் மட்டுமல்ல. சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், தயாரிப்பாளர், எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த நடிகன்.
அவர் நடித்த படங்கள் அனைவரும் அறிந்தவையே. கவிதாலயா தயாரித்த தொடர்கள் ஏராளம். அதில் ஜன்னல் என்னும் தலைப்பில் வெவ்வேறு தொடர்கள் வெளிவந்தன. அதில் அடுத்த வீட்டு கவிதை என்னும் பெயரில் வெளிவந்த தொடரின் நாயகன் எஸ்பிபி. நாயகி லஷ்மி. முதன் முதலாக எஸ்பிபியின் குரல் தாண்டி நடிப்புக்கு அடிமையானது அந்த தொடர் பார்த்துத்தான். அப்பப்பா… என்ன ஒரு கலைஞன்…
பக்தி பாடல்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். தெய்வத்தை நாம் இது போன்ற குரல்களில் அல்லாமல் வேறு எதில் உணரப் போகிறோம்?
அனைத்தையும் மீறி அவர் ஒரு சிறந்த மனிதர்.
ஜெயா டிவியில் என்னோடு பாட்டு பாடுங்கள் என்ற நிகழ்ச்சியில் எஸ்பிபி தான் ஜட்ஜ். சிறு பிள்ளைகளோ பெரியவர்களோ, நன்றாக பாடுகிறார்களோ இல்லையோ… கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் சிரித்த முகம் மாறாமல் திருத்தம் சொல்லும் பக்குவம் எத்தனை திறமை வாய்ந்த பாடகர்களுக்கு வாய்த்துவிடும்?
அதே சானலில் வேறொரு பாடகரை வைத்து நிகழ்ச்சி நடத்திய போது அவர் பாட வந்தவர்களை ‘வா போ’ என ஒருமையில் விழித்ததை எல்லாம் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஞானச் செருக்கு என்பதெல்லாம் சும்மா பம்மாத்து. மனிதன் எப்போதும் மனிதனாகவே வாழ்கிறான். எஸ்பிபி ஒரு சிறந்த மனிதன். சிறந்த பண்பாளர்.
குழந்தையாக தாயின் கருவில் இருக்கும் போது நாம் பெற்ற சுகத்தை குரல் வழியே நமக்கு இத்தனை நாள் கொடுத்துக் கொண்டிருந்த வானம்பாடி, நமது பால்ய காலத்தை மீட்டும் அந்தரங்க வீனை. அவரின் பாடல்களாலேயே பல நிகழ்வுகளை நினைவு வைத்துள்ளோம்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் என் பெரிய தந்தையை இழந்துவிட்டேன். அவர் கூறுவார் “இவன் தொண்ட குரல்வளையில ஒரு முத்தம் கொடுக்கணும்” என்று. விண்ணுலகில் அவரது அவா நிறைவேறியிருக்கும்.
பாலு… இனி வரும் இரவுகளில் உன் நினைவுகளோடு மட்டுமே உன் குரல் கேட்க இயற்கை எங்களுக்கு தைரியம் கொடுக்கட்டும்.
– எழுத்தாளர் காயத்ரி சத்யகிருஷ்ணன்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.