Aran Sei

‘நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் மீது பிரதமருக்கு அக்கறை இல்லையா? அவர்களை கொரோனா தாக்காதா?’ – வைகோ கேள்வி

நீட் தேர்வு எழுதுகின்ற அந்த மாணவர்களின் உடல்நலனில் பிரதமருக்கு அக்கறை இல்லையா? அவர்கள் மன அழுத்தங்களால் பாதிக்கப்பட மாட்டார்களா? அவர்களை மட்டும் கொரோனா தொற்று தாக்காமல், விதிவிலக்கு அளிக்குமா? என்று மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (ஜூன் 2), வைகோ வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசின் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ (Indian Certificate of Secondary Education) ஆகியவற்றில், பிளஸ் 2 தேர்வை நடத்துவது இல்லை என, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்து இருக்கின்றார். மாணவர்களின் உடல்நலம், மனநலத்தைக் கணக்கில் கொண்டு, இந்த முடிவை எடுத்து இருப்பதாக விளக்கம் அளித்து இருக்கின்றார். ஆனால், நீட் தேர்வு கிடையாது என அறிவிக்கவில்லை. இந்த ஆண்டும் நடத்தப் போகின்றார்கள். அப்படியானால், அந்தத் தேர்வு எழுதுகின்ற அந்த மாணவர்களின் உடல்நலனில் பிரதமருக்கு அக்கறை இல்லையா? அவர்கள் மனஅழுத்தங்களால் பாதிக்கப்பட மாட்டார்களா?அவர்களை மட்டும் கொரோனா தொற்று தாக்காமல், விதிவிலக்கு அளிக்குமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

‘கொரோனா சூழலைப் பயன்படுத்தி நுழைவுத்தேர்வு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஒன்றிய அரசு’ – சு.வெங்கடேசன் கண்டனம்

“எனவே, இது ஒரு சூழ்ச்சித் திட்டமே ஆகும். காரணம், அவர்கள் ஏற்கனவே கொண்டு வந்து திணித்து இருக்கின்ற புதிய கல்விக்கொள்கையின்படி, கல்லூரிகளில் சேருவதற்கு, மேனிலைப்பள்ளித் தேர்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது தேசிய தேர்வு முகமை நடத்தும் திறன் அறித் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான் சேர்க்கை என்று கூறி இருக்கின்றார்கள்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“இந்த ஆண்டு மட்டும் அல்ல, இனி எப்போதுமே பிளஸ் 2 தேர்வு நடத்த வேண்டிய தேவை இல்லை என்பதுதான் அவர்கள் திட்டம் ஆகும். ஆனால், மாநில அரசுகளின் பாடத்திட்டங்களைப் பொறுத்தமட்டில், மேனிலைப் பள்ளித் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான், கல்லூரிச் சேர்க்கை நடைபெறுகின்றது. அயல்நாடுகளின் பள்ளி, கல்லூரிச் சேர்க்கைக்கும் அந்த மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.” என்று வைகோ தனது அறிக்கையில் சுட்டிககட்டியுள்ளார்.

 ’மருத்துவச் சேர்க்கைக்கு நீட்டை நிச்சயம் ஏற்க முடியாது’ – ஒன்றிய அரசிடம் வாதிட்ட உயர்கல்வித்துறை அமைச்சர்

“வேலை வாய்ப்புகள் பெறுவதற்கும் அதுவே தகுதியாக இருக்கின்றது. மருத்துவக் கல்லூரிகளுக்கும் அந்த அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெற வேண்டும். நீட் தேர்வு கூடாது என்பதுதான், தமிழ்நாட்டின் கருத்து ஆகும். எனவே, ஒன்றிய அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல், தமிழ்நாட்டின் கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, அதன்படி தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்.” என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

“கொரோனா தொற்றின் வேகம் குறைந்த பிறகு, ஒருமாத முன் அறிவிப்போடு, மேனிலைப் பள்ளித் தேர்வுகளை நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் வலுவான பள்ளிக் கல்வி கட்டமைப்பு உள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடையாமல், தங்களின் பயிற்சிகளைத் தொடருகின்ற வகையில், மேனிலைப் பள்ளித் தேர்வு நடக்கும் என்ற தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்” என்று தனது அறிக்கையில் மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான  வைகோ வலியுறுத்தியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்