அண்மையில், ஐ.ஐ.டி மாணவர் அனுமதி மற்றும் ஆசிரியர் நியமனங்களில் இடஒதுக்கீடு முறையாக அமலாகாதது பற்றி ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு அதன் நோக்கங்களுக்கு எதிரான பரிந்துரைகளைச் செய்திருப்பதால் அவ்வறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்குமாறு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷான்ங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார்.
கடந்த மாதம் 15 ஆம் தேதி, மத்தியக் கல்வி அமைச்சர் அளித்துள்ள பதிலில், அக்குழு அறிக்கை இடஒதுக்கீடு பிரச்சினையோடு தொடர்புடைய அமைச்சகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கருத்துக்கள் வரப் பெற்றிருப்பதாகவும், தற்போது ஐஐடி கவுன்சிலின் நிலைக் குழுவின் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
மத்தியக் கல்வி அமைச்சரின் அக்கடிதத்திற்கு பதிலளித்து சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அக்கடிதத்தில், “அவ்வறிக்கை மீது எனது மீண்டும் அழுத்தமான கருத்தைப் பதிவு செய்ய விழைகிறேன். அவ்வறிக்கை முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அக்குழு மத்தியக் கல்வி நிலையங்கள் (ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு) சட்டம் 2019 பற்றி இரண்டு முன் மொழிவுகளை செய்துள்ளது. திட்டம் (அ) ஐ.ஐ.டி ஆசிரியர் நியமனங்களை இட ஒதுக்கீடு வரம்பில் இருந்தே நீக்க வேண்டுமெனப் பரிந்துரைத்துள்ளது. திட்டம் (ஆ) இட ஒதுக்கீட்டின் வரம்பிற்குள் உதவிப் பேராசிரியர் (தட்டு 1 & 2) மட்டும் இருந்தால் போதும்; மற்ற பதவிகளை இட ஒதுக்கீட்டில் வரம்பில் இருந்து ‘விடுவிக்கலாம்’ என்றும் அது பரிந்துரைத்துள்ளது. இந்த இரண்டு முன் மொழிவுகளுமே மத்தியக் கல்வி நிலையங்கள் (ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு) சட்டம் 2019 ஐ முறையாக அமலாக்குவது பற்றிப் பேசவில்லை. உண்மையில் அச்சட்டத்தை பொருளற்றதாக மாற்றுவதாகவே அதன் கருத்துக்கள் அமைந்துள்ளன.” என்று வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரை எய்ம்ஸ்கான பெரும்போராட்டத்துக்கு மக்கள் தயாராகவேண்டும் – சு.வெங்கடேசன்
மத்தியக் கல்வி நிலையங்கள் (மாணவர் அனுமதியில் இட ஒதுக்கீடு) சட்டம் 2006 பற்றியும் ஆராய்ந்த அக்குழு அதன் அமலாக்கம் குறித்து முழு திருப்தியைத் தெரிவித்துள்ளது என்றும் ஆனால் மாணவர் அனுமதி குறித்து கிடைக்கும் தகவல்களும், தரவுகளும் அறிக்கையின் மதிப்பீடோடு சற்றும் பொருந்தவில்லை என்றும் சு.வெங்கடேசன் தன் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இட ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படாத பட்சத்தில் அவற்றைப் பொது இடங்களாக (Dereservation) மாற்றுவது குறித்த அக்குழுவின் பரிந்துரைகளும் பொது நெறிகளுக்கும், இதுகுறித்த அரசாணைகளுக்கும் முரணானதாக உள்ளது. இடஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படாவிட்டால் அடுத்த ஆண்டே பொது இடங்களாக மாற்றப்படலாமென அக்குழு பரிந்துரைத்துள்ளது. இது “நிலுவைக் காலியிடங்கள்” (Back log) என்ற கருத்தாக்கத்தையே கொன்று விடும். ஒடுக்கப்பட்ட பிரிவினர் பிரதிநிதித்துவத்தில் உள்ள இடைவெளியை நிரந்தரமானதாக ஆக்கி விடும். ஆகவே இத்தகைய முன் மொழிவை நேரடி பணி நியமனங்களில் அனுமதிக்கவே கூடாது.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் பரிந்துரைகள் எல்லாம் அக்குழுவின் நோக்கம் பற்றியே சந்தேகங்களை எழுப்பியுள்ளன என்று சு.வெங்கடேசன் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டேட் வங்கி இடஒதுக்கீடு விவகாரத்தில் முழு ஆய்வு வேண்டும் – சு.வெங்கடேசன்
மேலும், “குழுவின் அறிக்கை ஏற்படுத்தியுள்ள குழப்பம் தொடர அனுமதிக்கக் கூடாது. அவ்வறிக்கையை முழுமையாக நிராகரிக்கிற முடிவு, காலம் சற்றும் விரயம் ஆகாமல் உடனே எடுக்கப்பட வேண்டும். ஐஐடி கவுன்சிலின் நிலைக்குழு இட ஒதுக்கீட்டின் அடிப்படை நெறிகளை, சட்டத்தின் நியதிகளை மீறக் கூடாது எனப் பொருத்தமாக அறிவுறுத்த வேண்டும். மேலும் இவ்விரு சட்டங்களின் முறையான அமலாக்கம் எழுத்தும், எழுத்தின் உணர்வும் சற்றும் நீர்த்துப் போகாமல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.”என்று தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சு. வெங்கடேசன், தனது கருத்துக்களில் உள்ள நியாயங்களைப் புரிந்து கொண்டு விரைவாக முடிவெடுக்க வேண்டுமென்றும் அவர்கேட்டுக் கொண்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.