இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மு.க ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய இடஒதுக்கீட்டில் தமிழகத்தின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதலே 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்திருந்தன.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “நடப்பாண்டில் மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு உத்தரவிட முடியாது. 27% இடஒதுக்கீட்டையும் வழங்க உத்தரவிட முடியாது.” என்று தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின் 50% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
“அரசியல் ரீதியான வேறுபாடுகளைக் கடந்து, பின்தங்கிய மாணவர்களின் உரிமைகளை உறுதி செய்வதற்காக நாம் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்.” என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
I wrote to Hon'ble @PMOIndia today seeking his immediate intervention for implementation of state-specific reservation for OBC students in medical admissions this year.
Cutting across political ideologies, we must unitedly strive for the rights of disadvantaged students. pic.twitter.com/RosnRGRLOz
— M.K.Stalin (@mkstalin) October 26, 2020
பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மு.க ஸ்டாலின், “உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் மருத்துவக் கல்வி இடங்களில் இதர பிறபடுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், இந்தக் கல்வியாண்டில் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பது கவலையுறச் செய்கிறது.
திமுக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்தது.
குறிப்பாக இந்தப் பேரிடர் காலத்தில் உடனடியாக இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை என்றால் ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளுக்கான வாய்ப்பு பறிக்கப்பட்டு, கற்பனை செய்து பார்த்திட முடியாத அளவிலான இழப்பு நேரும்.
எப்பொழுதுமே அரசியல் கட்சிகள் கருத்தியல் ரீதியிலான வேறுபாடுகளைத் தாண்டி சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயலாற்றி இருக்கின்றன.
மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மேற்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு மு.க ஸ்டாலின் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.