லண்டன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மீண்டும் செயல்படத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
1916-ம் ஆண்டு தொடங்கப்பட்ட லண்டன் பல்கலைக்கழகம் உலகின் முன்னணிப் பல்கலைக்கழகமாக இருக்கிறது. 300-க்கும் மேற்பட்ட பேராசிரியர்களையும், 9000-க்கும் மேற்பட்ட மாணவர்களையும் கொண்டது.
தமிழ்த் துறை
லண்டன் பல்கலைக்கழகத்தில் 1926-ம் ஆண்டு முதலே, 20 மொழித் துறைகளில் ஒன்றாக தமிழ்த் துறை தொடங்கப்பட்டது. இங்கு தமிழில், இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்கான வகுப்புகள் உள்ளன.
இங்குள்ள நூலகத்தில் தமிழ் தொடர்பான 1,50,000 ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் நூல்கள் ஆய்வுக்கு உள்ளன. நிதிப் பற்றாக்குறை போன்ற பல காரணங்களால், கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழ்த் துறை மூடப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள தமிழர்கள் ‘ஐக்கிய ராஜ்ஜிய தமிழ் கல்வி அமைப்பு (TamilStudiesUK)’ என்ற பெயரில் ஒருங்கிணைந்து, பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை மீண்டும் திறக்க முயற்சி எடுத்து வருகின்றனர்.
மேலும், இவர்களுடன் சேர்ந்து லண்டன் பல்கலைக்கழகத்தில் எஸ்ஓஏஎஸ் என்ற தெற்காசியக் கல்விக் கூடமும் (School of Oriental and Asian Studies- SOAS) முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை
இது குறித்து, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், லண்டன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மீண்டும் செயல்படத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை வைக்கிறது.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
1916 -ம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட தமிழ்த்துறை கடந்த 20 ஆண்டுகளாக முடங்கியிருப்பது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. நிதிப் பற்றாக்குறை காரணமாக தமிழ்த்துறை செயல்படாமல் இருக்கும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் நூலகத்தில் 1,50,000 ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் நூல்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
லண்டன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்கு இந்தியாவை ஆட்சிசெய்துகொண்டிருந்த நேரத்தில் ஆங்கிலேய அரசு நிதி உதவி அளித்திருக்கின்றது. அந்நிதி தற்போது தீர்ந்துவிட்டதினால் இப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை முடக்கப்பட்டுள்ளது. இந்த அவல நிலையின் காரணமாக லண்டன் மாநகரத்தில் வாழக்கூடிய தமிழ் மக்களின் அடுத்த தலைமுறையினர் தமிழ் மொழியில் உயர்கல்வி பெற வாய்ப்பினை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது.
லண்டன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையை மீண்டும் செயல்படுத்துவதற்காக வைப்பு நிதியாக ரூ.100 கோடி செலுத்த வேண்டும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்தக் தொகை திரட்டும் அற முயற்சியில் லண்டனில் வாழும் தமிழர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழக அரசும் இதற்கான முன்முயற்சிகளை எடுத்து புகழ்பெற்ற லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை உயிர்ப்பிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா, தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.